மன வளக்கலை மன்றங்கள் யோகா விழிப்புணர்வு

திருப்பூர் : சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. -திருப்பூர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள், தவ மையங்கள் மூலமாக இலவச யோகா முகாம் நடத்தப்படுகிறது.

யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச யோகா தினம், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 6:00 மணி முதல் 7.30 மணி வரை, யோகா செய்முறை பயிற்சி நடந்தது.

உலக சமுதாய சேவா சங்கத்தின் 'யோகமும் இளைஞர் வல்லமையும்' கல்வி பிரிவினர் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சிகள் நடந்தது. மனவளக்கலையின், 'ஆனந்த வாழ்க்கை' என்ற படக்காட்சி திரையிடப்பட்டது.

திருப்பூர் மண்டல இணை இயக்குனர் பழனிசாமி வரவேற்றார். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி முன்னிலை வகித்தார். உலக சமுதாய சேவா சங்கத்தின், பயிற்சியாளர் ஈஸ்வரன், பயிற்சியை துவக்கி வைத்தார்.

உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் நாகராஜன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன் பேசினர்.யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் கருணாநிதி நன்றிகூறினார்.

மனவளக்கலை மண்டலம் சார்பில், அரசு பள்ளிகளில், சர்வதேச யோகா தினம், மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் கொண்டாடப்பட்டது. யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குஜராத்தி திருமண மண்டபத்தில், குஜராத்தி சமாஜம் சார்பில், யோகா பயிற்சி நடந்தது. காலை, 6:00 முதல், 7:00 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் பங்கேற்று, ஆரோக்யத்துக்கான யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

Advertisement