ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 20,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அங்கு குளிக்க இரண்டாவது நாளாக, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி அணையிலிருந்து, இரு நாட்களுக்கு முன் வினாடிக்கு, 25,000 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 16,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, பிறகு, 20,000 கன அடியாக அதிகரித்தது.



இதனால், அங்குள்ள ஐவர் பாணி, ஐந்தருவி, மெயின் அருவி, மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.


நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியாற்றில் குளிக்க நேற்று, இரண்டாவது நாளாக, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணியர், பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.


நீர்வரத்து அதிகரிப்பால், ஒனேக்கல்லில் குளிக்க தடை தொடரும் நிலையில், பாதுகாப்பு பணி குறித்து, பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள்., மணிவண்ணன், லோகநாதன், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Advertisement