திருநீறை அழிப்பது புரட்சி இல்லை கவர்னர்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

11

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில்அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சியை, மஹாராஷ்டிர மாநிலகவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வழிபட்டார். தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பாடலை வெளியிட்டார்.


அப்போது அவர் கூறியதாவது: முருகனையும், தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை முருக பக்தர்கள் மாநாடு உணர்த்துகிறது.தமிழ் மண்ணில் முருகப் பெருமானின் சக்தி தன்னிகரற்றது. வட இந்தியாவில் கார்த்திக்காகவும், தமிழ் மண்ணில் கந்தனாகவும் கொண்டாடப்படுகிறார்.

ஆனால் முருகனின் அறுபடை வீடு தமிழகத்தில் அமைந்துள்ளது. அதை மதுரையில் ஒன்றாக அமைத்தது பாராட்டுக்குறியது. தமிழகத்தில் ஆரம்ப காலம் முதல்ஆன்மிகமும் அரசியலும் கலந்து உள்ளது. ஆன்மிகம் இல்லை எனச் சொல்வதில் இருந்து தான் தி.மு.க., பிறந்துள்ளது. ஆன்மிகத்தை சொல்லி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதில் தவறில்லை.


முருகனின் கந்த சஷ்டி கவசத்தை அவதுாறாக பேசிய போது தமிழர்கள் வீறு கொண்டு எழுந்தனர். முருகனை தேவையில்லாமல் யாரும் தொடக்கூடாது என்பதை இந்த மாநாடு பறைசாற்றுகிறது. முருகனை கும்பிட்டால் மதக் கலவரம் வந்து விடும் என்றால், இயேசு, அல்லாவை வணங்கினால் வராதா.


அவரவர் தெய்வத்தை வழிபட அரசியல் சாசனம் வழிவகை தந்துள்ளது. இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது குறித்து அரசியல் சாசனம் எதுவும் கூறவில்லை. தமிழகத்தில் முருகனை எப்படி வேண்டுமானாலும் பேசுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது. திருநீறு வைப்பது வி.சி.தலைவர் திருமாவளவனை பொறுத்தவரை புரட்சி. திருநீறை அழிப்பது என்னை பொறுத்தவரை புரட்சி இல்லை.



முருக பக்தர்களில் முதன்மையானவர் முத்துராமலிங்கம் தேவர். தேவரை யாரெல்லாம் உயர்வாக நினைக்கிறார்களோ அவர்கள் முருகனை வணங்குவர். இவ்வாறு கூறினார்.

பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் ''ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் முருகன் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்' என்றார். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement