ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வீசிய 'பங்கர் பஸ்டர்' குண்டு!

9

வாஷிங்டன்: ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப்படாத ஜி.பி.யூ-57 பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது என்பது தெரியவந்தது.

இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே 10 நாட்களாக போர் நடந்து வருகிறது. தற்போது ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ''ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்'' என நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.



இந்நிலையில், தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, உலகில் இதுவரை எங்கும் பயன்படுத்தப்படாத ஜி.பி.யூ-57 எனப்படும் பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை (பங்கர் பஸ்டர்) வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானின் பார்டோ அணு சக்தி மையம், மலையை குடைந்து 80 முதல் 90 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


அங்கு தான், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருவதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் கண்டறிந்தனர். அந்த மையத்தை அழிக்க வேண்டுமெனில், அமெரிக்காவின் அடி ஆழம் வரை துளைத்துக்கொண்டு சென்று பதுங்கு குழிகளை அழிக்கும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் போட்டால் மட்டுமே முடியும் என்றும் உளவுத்துறையினர் கூறி வந்தனர். அதன்படி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.


இந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை, பி-2 என பெயரிடப்பட்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பி-2 குண்டுவீச்சு விமானமும், தலா இரண்டு ஜி.பி.யூ-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த குண்டுகள் ஒவ்வொன்றும் 30,000 பவுண்டுகள் (13.6 டன்) எடை கொண்டவை.


இந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் இடம், முற்றிலும் மண்ணோடு மண்ணாகி விடும் என்று அமெரிக்க ராணுவத்தினர் கூறியுள்ளனர். எனினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை ஈரான் அரசு முழுமையாக வெளியிடவில்லை. பார்டோ அணு சக்தி மையத்தின் நுழைவாயில் மற்றும் பின்புற கேட்டுகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement