12 தொகுதிகளில் போட்டியிடுவது கட்டாயம்: தி.மு.க., கூட்டணியில் துரையால் சலசலப்பு

8


சென்னை: மாநில கட்சி அங்கீகாரம் பெற, வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, ம.தி.மு.க., முதன்மைச் செயலர் துரை வைகோ எம்.பி., கூறினார்.


திருச்சியில் நேற்று பேட்டியளித்த அவர், ''கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால், வரும் சட்டசபை தேர்தலில் குறைந்தது, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட், வி.சி., போல நாங்களும் எங்கள் விருப்பத்தைச் சொல்கிறோம். ஆனால், ம.தி.மு.க., தலைமைதான் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்யும்,'' என்றார்.

கடந்த 2019ல் உருவான தி.மு.க., தலைமையிலான 10 கட்சிகள் கூட்டணி, 2021 சட்டசபை; 2024 லோக்சபா தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி, இரண்டாவது முறையாக, வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கடந்த 2021 தேர்தலில், காங்கிரஸ் 25, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.



ஆனால், வரும் தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என, தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளன. கடந்த 10ம் தேதி பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம், '2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். இந்த அணுகுமுறை வரும் தேர்தலில் தொடரக்கூடாது. எனவே, விட்டுக்கொடுப்பது, தி.மு.க., தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.


அவரைத் தொடர்ந்து, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு, 'வரும் தேர்தலில், 50 தொகுதிகளில் போட்டியிட எங்கள் தொண்டர்கள் விரும்புகின்றனர்' என, கூறியிருக்கிறார். அதுபோல, 'கடந்த 2006 சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, 48 தொகுதிகளை, இந்த முறை கேட்டுப் பெற்றாக வேண்டும்' என்ற குரல், அக்கட்சிக்குள் எழுந்துள்ளது.


கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே, குறைந்தது 180 தொகுதிகளில் போட்டியிட, தி.மு.க., விரும்புகிறது. ஆனால், கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு, இப்போதே நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளதால், அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட், வி.சி., காங்கிரசை தொடர்ந்து, ம.தி.மு.க.,வும், 12 தொகுதிகள் வேண்டும் என, தி.மு.க., கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


@block_P@

குறைந்து விடக்கூடாது!

அதிக தொகுதிகள் கேட்பது அவரவர் உரிமை. அதை தவறு என சொல்ல முடியாது. ஆனால் இருப்பது, 234 தொகுதிகள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது, இருக்கும் தொகுதிகள் குறைந்து விடக்கூடாது என்பதற்கான உத்தியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்: கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க., செய்தித் தொடர்புக்குழு செயலர்block_P

Advertisement