திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்

திருவாலங்காடு : திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பங்குனி உத்திர விழாவின் ஏழாம் நாளில் தேர் திருவிழா நடைபெறும். இந்த தேர் 'கமலத்தேர்' என அழைக்கப்படுகிறது. 55 அடி உயரம் கொண்ட தேர் பாதுகாப்பாக நிறுத்த, திருவாலங்காடு காவல் நிலையம் அருகே மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் தேர் நிறுத்துமிடத்தில் தண்ணீர் தேங்குவதால், தரைத்தளம் பலமிழக்கும் அபாயம் உள்ளதென்று, தேர் மண்டபத்தின் இருபுறமும் தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தகடுகள் பாழடைந்து இருந்தது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த மார்ச் மாதம் அறநிலையத்துறை சார்பில், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே பதிக்கப்பட்ட பாறை கற்களை அகற்றி, அங்கு மண் கொட்டப்பட்டு, தரைத்தளம் 20 செ.மீ., உயரத்திற்கு அமைக்கப்பட்டது. பின், தகடுகள் அகற்றப்பட்டு, புதிதாக பைபர் பலகைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Advertisement