அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்

1

டெஹ்ரான்: அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.


மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது. ஈரானின் அணு ஆயுத வளாகங்கள், அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.


ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.


அதேநேரத்தில் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்பஹானின் பாதுகாப்பு துணை கவர்னர் அக்பர் சலேஹி கூறியதாவது:
நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிச்சத்தங்கள் கேட்டன. இது தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவோம் என்று ஈரான் அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து ஈரான் அதிகாரி ஹசன் அபேதினி கூறியதாவது: அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம். டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, ஈரான் பொருட்களை ஏற்கனவே அகற்றிவிட்டதால் பெரிய அடியைச் சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement