ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; பாதி வழியில் சென்னைக்கு திரும்பிய லண்டன் விமானம்!

1


சென்னை: ஈரான் அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், 247 பயணிகளுடன் லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பாதியில் மீண்டும் சென்னை திரும்பி வந்தது.

ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கி உள்ளது. ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்க போர் விமானங்கள், இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.



இந்த சூழலில் இன்று(ஜூன் 22) காலை 6.24 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் -777 விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 247 பயணிகள் 15 பணியாளர்கள் என மொத்தம் 262 பேர் பயணம் செய்தனர்.


விமானம் அரபிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானிக்கு மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டதாகவும், மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டாம் என்றும் தகவல் வந்தது. இதையடுத்து விமானி சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விமானம் 8.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 247 பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இது குறித்து, விமான நிலைய ஆணையர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் வான்வெளி மூடப்பட்டதால், விமானம் மீண்டும் சென்னை திரும்பி வந்தது. எரிபொருள் நிரப்பி கொண்ட பிறகு, 11.50 மணிக்கு விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.


இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து, இன்று காலை குவைத் ,தோகா, துபாய், ஷார்ஜா, அபுதாபி செல்ல விமானங்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement