கடல் வழியை மூட ஈரான் முடிவு: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

2


டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் பார்லிமென்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது. தற்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.


அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய நிலையில், ஹோர்முஸ் நீரிணைப்பு கடல் வழித்தடத்தை மூடுவதற்கு ஈரான் பார்லிமென்ட் அனுமதி வழங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கான முக்கிய கடல் வழியாக ஹோர்முஸ் நீரிணைப்பு உள்ளது.


உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணைப்பு வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹோர்முஸ் சர்வதேச வர்த்தகத்திற்கான மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாகும். எனவே, அதன் மூடல் உலகளாவிய வர்த்தகத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலைகளும் உயரும். இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான தாக்குதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement