மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே மத்திய அரசின் வேளாண் அறிவியல் துறைக்கு சொந்தமான விவசாய நிலங்களை வருவாய்த்துறையினர் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட முடிவு செய்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் நிலவும் வறட்சியை கருதி 1977 ல், வறட்சியை தாங்கி விளையும் பயிர் வகைகள் பருத்தி,நெல், பழ மரங்களின் விதைகளை ஆராய்ச்சி செய்ய அருப்புக்கோட்டையை அருகே கோவிலாங்குளம் குளத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 424 ஏக்கரில் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது.

இதில் பல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் விதைகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கி விவசாய ஆராய்ச்சி குழுவிடம் ஒப்புதல் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவர். இத்துடன் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பழ வகைகள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

கோவை வேளாண் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் இங்கு ஆராய்ச்சி செய்ய வருவர். வேளாண்மையின் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு இந்த நிலையம் பெரும் பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், தற்போது இப் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு அறிவியல் நிலையத்தில் உள்ள பயன்படாத நிலம் என வகைப்படுத்தி இவற்றை வருவாய் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என டி.ஆர்.ஓ., சில மாதங்களுக்கு முன்பு அரசாணை அனுப்பினார்.

விவசாயிகள் எதிர்ப்பு



இது பற்றி அறிந்த விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கலெக்டர் நடத்திய குறை தீர்க்கும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்று அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. சிப்காட்டுக்கு நிலம் எடுக்க வில்லை என வாய்மொழியாக கலெக்டர் ஜெயசீலன் பதில் அளித்தார். ஆனால் மீண்டும் அப் பகுதியில் 129 ஏக்கர் நிலங்களை ஒப்படைக்க சர்வே எண் உள்ளிட்ட குறியீடுகளை காண்பித்து உரிய வழிமுறை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு



இதுகுறித்து காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் கூறியதாவது: தென் மாவட்டங்களின் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் அக்கறை கொள்ளாமல் அரசு தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தி வருவதை விவசாய சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாது. விவசாய கூட்டங்களில் கலெக்டர் எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ளார். அரசு தலையிட்டு வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை முழுமையாக விவசாய வளர்ச்சிக்கு தான் பயன்படுத்த வேண்டும். இந்த நில எடுப்பை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலை 15-ல் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

Advertisement