சிங்கம்புணரியில் ரோட்டோர திறந்த வெளி கிணறுகள்; விபத்து அச்சத்தில் மககள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் ரோட்டோர கிணறுகள் அருகே தடுப்புகள் அமைக்கப்படாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, பிரான்மலை, ஒடுவன்பட்டி, திருவாழ்ந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ரோட்டோர கிணறுகள் உள்ளன. பெரும்பாலான கிணறுகளில் முறையான தடுப்புகள் இல்லாமலும் சாலையோர தடுப்புகள் இல்லாமலும் ஆபத்தான மரண குழிகளாகவே காட்சியளிக்கிறது. கடந்த மே மாதம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் ரோட்டோர கிணறுகள் அருகே தடுப்புகள் அமைக்கும் பொருட்டி கணக்கெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திலும் ரோட்டோர கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல கிணறுகள் இன்னும் ஆபத்தான கிணறுகளாக காட்சியளிக்கிறது. உடுவன்பட்டி போன்ற இடங்களில் வளைவுகளில் ஆபத்தான நிலையில் இந்த கிணறுகள் புதர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கிறது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சாலையோர தடுப்புகளையும் தேவைப்படும் இடங்களில் தடுப்புச் சுவர்களையும் அமைக்க வேண்டும்.