கர்நாடகாவில் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு

- நமது நிருபர் -
சாம்ராஜ் நகர் மாவட்டம் அரக்கலவாடிக்கு அருகேயுள்ள யானகும்பா கிராமத்தில், மத்திய தொல்லியல் துறையின், மைசூரு கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்களான அனில்குமார், பாலமுருகன் ஆகியோர், சமீபத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, வயல் வெளியில் எட்டு நடுகல் கல்வெட்டுகளை கண்டறிந்தனர். அவற்றில், மூன்று தமிழிலும், ஐந்து கன்னட மொழியிலும் இருந்ததை ஆய்வு செய்தனர். அவற்றில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த எழுத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டன. ஒரு கல்வெட்டில், எழுத்துக்கள் தெளிவாக உள்ளன.
இது குறித்து, மைசூரு கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது:
யானகும்பா கிராமத்தில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளும், மொழிகளில் மாறுபட்டாலும், நடுகல் கல்வெட்டுகளாகவே உள்ளன. அக்காலத்தில், அப்பகுதியில் அதிகளவில் எருமை உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் இருந்துள்ளனர். அவர்கள் தங்கள் கால்நடைகளை, ஓரிடத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவற்றை வேறு ஊர்களில் இருந்து வருவோர், திருடிச் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. அதை தடுத்தும், காப்பதும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. அவ்வாறான சண்டையில் உயிர் நீத்தவர்களுக்காக, நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் எருமைகள் கும்பலாக இருந்த ஊர் என்ற பொருளில் எருமைக்கும்பா என்று அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் மருவி, யானைக்கும்பா என்று மாறி, தற்போது யானகும்பா என, அழைக்கப்படும் தகவலை, இந்த கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. கல்வெட்டில், 'வேலப்பாடியில் கால்நடை தாக்குதலின் போது இறந்த, பைற்கைபாடி கொல்லன் முனிவரகண்டாச்சாரியின் மகன் கொல்லன் சாரி என்ற மாவீரனின் நினைவாக. இந்த நினைவுக் கல் எழுப்பப்பட்டது' என, தமிழில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.