அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம், தியாகதுருகம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருவோர் வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால், மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது.

மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான, 'பார்க்கிங்' வசதி இல்லாததால், வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.

மேலும் மருத்துவமனைக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியிலும் நிறுத்தப்படுகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, நிறுத்துமிடம் அமைத்து ஒழுங்குபடுத்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement