மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி

20


மதுரை: ''மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்'' என இயக்குனர் அமீருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கஸ்துாரி பதிலடி தந்தார்.

அவர் கூறியதாவது: கும்பாபிஷேகம், முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. தி.மு.க., நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் மதுரை மாநாடு நடக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கு அரசியல் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது பெருமை. அதை தி.மு.க., ஆதரிக்க வேண்டும்.

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் 'அக்மார்க்' மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கத்தை பார்க்கப்போகிறீர்கள். முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்வதாக இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.



அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் தானே. அவர்களை அமீர் தமிழனாக நினைக்கவில்லையா எனத் தெரியவில்லை. மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் இதற்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகதான் வரலாறில் உள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பதில்லை. எங்களுடைய ஒவ்வொருவர் மனதிலும் நடக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்கு இணங்க, விஜய் மீதுள்ள அன்பு குறைந்து விடாது. அவர் சரியான பாதையிலேயே பயணிக்கிறார். இவ்வாறு கூறினார்.

Advertisement