வயது 22; பைக்கில் பயணித்தது 6,039 கி.மீ., ராணிபென்னுாரின் கோமல் பாட்டீல் சாதனை

'லாங் டிரைவ்' எனும் நீண்ட துார பயணம் செய்வது, இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. முதலில் கார்களில் லாங் டிரைவ் சென்றவர்கள் இப்போது பைக்குகளில் செல்ல ஆரம்பித்து உள்ளனர். அதுவும் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரம். கர்நாடகாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் 20 நாட்களில் 6,039 கி.மீ., துாரம் பைக்கில் தனி ஆளாக பயணித்து உள்ளார்.

ஹாவேரி மாவட்டத்தின் ராணிபென்னுாரை சேர்ந்தவர் பிரபுலிங்கா. இவரது மகள் கோமல் பாட்டீல், 22. பைக் ரைடரான இவர், ராணிபென்னுாரில் இருந்து காஷ்மீர் சென்று, மறுபடியும் ராணிபென்னுாருக்கு வந்து உள்ளார்.

இந்த பயணம் குறித்து கோமல் பாட்டீல் கூறியதாவது:

சிறு வயதில் இருந்து பைக்கில் பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். 10 வயதில் மொபெட் ஓட்டி பழகினேன். பின், ஸ்கூட்டருக்கு மாறினேன். எனக்கு 18 வயது ஆனதும், கியர் பைக் ஓட்ட ஆரம்பித்தேன். ஓட்டுநர் உரிமம் வாங்கியதும் டியுக் - 360 பைக்கை, பெற்றோர் வாங்கி கொடுத்தனர்.

அந்த பைக்கில் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நிறைய பேர் காஷ்மீருக்கு தனியாக பைக் பயணம் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்தேன். எனக்கும் காஷ்மீர் செல்ல ஆசை வந்தது. பெற்றோரிடம் அனுமதி வாங்கி விட்டு, கடந்த மார்ச் 8ம் தேதி ராணிபென்னுாரில் இருந்து எனது பயணத்தை துவக்கினேன்.

மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களை கடந்து ஸ்ரீநகர் சென்றேன். அங்கிருந்து திரும்பி வரும் போது டில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களை கடந்து சொந்த ஊரை சென்று அடைந்தேன். இந்த பயணம் 20 நாட்கள். இதில் 6,039 கி.மீ., துாரம் சென்று வந்து உள்ளேன்.

சாலைகள் மோசமாக உள்ள இடங்களில் பைக் ஓட்டி சென்றது சவாலாக இருந்தது. ஒவ்வொரு 100 கி.மீ., துாரம் சென்றதும், பைக்கை அரை மணி நேரம் நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தேன். இரவு நேரத்தில் பெண்களுக்கான விடுதியில் தங்கினேன்.

வரும் நாட்களில் வடகிழக்கு மாநிலங்களுக்கு, பைக்கில் செல்லும் திட்டம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.




- நமது நிருபர் -

Advertisement