அழகி போட்டியை அலங்கரிக்கும் உடுப்பி பெண்

உடுப்பி, பர்கூரில் உள்ள பென்னேகுத்ருவை சேர்ந்தவர் ஸ்வீசல் பர்டேடோ, 20. இவர் பள்ளியில் படிக்கும் போதே, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போதே பரிசுகளையும் பெற்று வந்தார். இது, இவரை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியது.

பெங்களூரில் உள்ள புனித வளனார் கல்லுாரியில் பி.பி.ஏ., பட்டப்படிப்பை படித்தார். அச்சமயத்தில், அழகி போட்டிகளில் கலந்து கொள்ள துவங்கினார். மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால், வாய்ப்பு கிடைக்கும் அத்தனை போட்டிகளிலும் பங்கு பெற்று வந்தார்.

கடந்த 2021ல் தேசிய அளவில் நடந்த புதுமுக அழகிகளுக்கான போட்டியில் பங்கேற்று வென்றார். இதைத் தொடர்ந்து, 'மிஸ் சூப்பர் மாடல் இந்தியா 2022' போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தார். இதையடுத்து, மிஸ் டீன் யுனிவர்சல் ஆசியா பட்டத்தை பெற்றார். இதனால், இவரை பலரும் தென்னிந்தியாவின் சூப்பர் மாடல் என செல்லமாக அழைக்கின்றனர்.

அழகிப் போட்டிகள் மட்டுமின்றி, உடை அலங்காரத்திலும் கை தேர்ந்தவராக உள்ளார். தற்போது, பல நாடுகளில் நடக்கும் சர்வதேச அளவிலான அழகி போட்டிகளில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் இருக்கின்றனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு கம்போடியாவில் நடந்த சர்வதேச அளவிலான, 'மிஸ் குளோபல்' அழகி போட்டியில், 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். அதிலும் வென்று காட்டி, அசத்தினார். சர்வதேச அளவில் பட்டம் பெற்றாலும், மேலும் பல பதக்கங்களை பெற தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.




- நமது நிருபர் -

Advertisement