லஞ்ச வழக்கில் கைதாகி ஜாமின் பெண் விஞ்ஞானி 'சஸ்பெண்ட்'

மங்களூரு : லஞ்ச வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அதே பணியில் அமர்ந்த, சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை மூத்த விஞ்ஞானி கிருஷ்ணவேணியை, சஸ்பெண்ட் செய்து, அரசு உத்தரவிட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம், உல்லால் தாலுகாவின், இரா கிராமத்தை சேர்ந்த ஒருவர், புதிதாக வீடு கட்ட திட்டமிட்டார். வீடு கட்டும் இடத்தில், கற்களை அகற்றி சமநிலைப்படுத்த அனுமதி கேட்டு, சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு அனுமதி அளிக்க, 50,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை மூத்த நில விஞ்ஞானி கிருஷ்ணவேணி நெருக்கடி கொடுத்தார்.
இது குறித்து கட்டட உரிமையாளர், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். அதிகாரிகள் சொற்படி, அவர் மே 28ம் தேதியன்று, 50,000 ரூபாயை கிருஷ்ணவேணிக்கு கொடுக்க சென்றார்.
கிருஷ்ணவேணி, தன் கார் ஓட்டுநர் மது மூலமாக, பணத்தை பெற்று கொண்டார். அப்போது திடீர் சோதனை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள், கிருஷ்ணவேணி, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அலுவலக ஊழியர் பிரதீப் குமார், கார் ஓட்டுநர் மது ஆகியோரை கைது செய்தனர். அதே நாளன்று, அலுவலக ஊழியர் பிரதீப் குமாரை, அரசு சஸ்பென்ட் செய்தது.
ஓட்டுநர் மது, ஒப்பந்த ஊழியர் என்பதால், அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. லஞ்ச வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணவேணி, நான்கைந்து நாட்களுக்கு பின் ஜாமினில் வெளியே வந்தார்.
ஜூன் 18ம் தேதியன்று, மீண்டும் அதே பணியில் அமர்ந்து, அதிகாரத்தை காட்ட துவங்கினார்.
எந்த அதிகாரியாக இருந்தாலும், குற்ற வழக்கில் கைதாகி, 48 மணி நேரத்துக்கு அதிகமாக சிறையில் இருந்தால், அவரை சஸ்பெண்ட் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் கிருஷ்ணவேணி விஷயத்தில், இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தீவிரமாக கருதிய, மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று முன் தினம் அரசு தலைமை செயலருக்கு கடிதம் எழுதி, கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
இதையடுத்து கிருஷ்ணவேணியை, மே 28ம் தேதியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நேற்று முன் தினம் இரவு, அரசு உத்தரவிட்டது.
மேலும்
-
மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
-
இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
-
உள்நாட்டில் தயாரித்த தற்கொலைப்படை டிரோன் 'நாகாஸ்திரா': கொள்முதலுக்கு ராணுவம் உத்தரவு
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு