உள்நாட்டில் தயாரித்த தற்கொலைப்படை டிரோன் 'நாகாஸ்திரா': கொள்முதலுக்கு ராணுவம் உத்தரவு


புதுடில்லி: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'நாகாஸ்திரா' 1ஆர் எனப்படும் தற்கொலைப்படை டிரோன்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் நடக்கும் போர்களில் இப்போது முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுபவை டிரோன்கள் தான். போர் விமானங்கள், ஏவுகணைகளை பயன்படுத்துவதை காட்டிலும், டிரோன்கள் செலவு குறைந்தவை. அதிகம் பயன் தரக்கூடியவை.
இதனால், உலக நாடுகள் அனைத்தும் இப்போது டிரோன்களை உற்பத்தி செய்யவும், வாங்கவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய ராணுவமும் உள்நாட்டில் தயார் செய்யப்படும் டிரோன்களை கொள்முதல் செய்து வருகிறது.

அந்த வகையில் நாக்பூரைச் சேர்ந்த சோலார் டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம் இந்த டிரோனை உருவாக்கியுள்ளது. 80 சதவீத உள்நாட்டு தயாரிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நாகாஸ்திரா 1ஆர் டிரோன்கள், குறிப்பிட்ட தொலைவில் உள்ள இலக்குகளை வெடிமருந்துகளை சுமந்து சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

தற்கொலைப்படை டிரோன் என்றும் அழைக்கப்படும் இந்த டிரோன், எதிர்கால போர்களில் பேருதவியாக இருக்கும். இந்த டிரோன்களின் ஏவுதளங்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த டிரோன்களில், 360 டிகிரி கிம்பல் கேமராக்கள், இரவு நேர ஆபரேஷன்களுக்கு பயன்படும் விதமாக, தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டிரோன் வீடியோ மற்றும் டெலிமெட்ரி தகவல் தொடர்புக்கான வசதிகளை கொண்டுள்ளது.


நாகாஸ்திரா 1ஆர் டிரோனின் சோதனை, லடாக், உத்தரபிரதேசத்தில் உள்ள பாபினா உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலமாகும்.

Advertisement