கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு

குண்டூர்: தன்னுடைய காரின் சக்கரத்தில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ஆந்திராவின் ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டுக்கு ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வந்தார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு, மீண்டும் காரில் ஏறி அவர் புறப்பட்டார்.


குண்டூர் மாவட்டத்திற்குள் அவரது கார் சென்ற போது, ஒய்.எஸ்.ஆர்., கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, செல்லி சிங்கையா என்ற தொண்டரும் ஜெகன்மோகனின் காரின் அருகில் சென்றார். அந்த சமயம், சிலர் அவரது காரின் மீது ஏறி அலப்பறை செய்தனர். அப்போது, கால் தவறி விழுந்த சிங்கையா கீழே விழுந்தார். இதனை யாரும் கவனிக்காத நிலையில், டிரைவரும் காரை முன்னோக்கி செலுத்தினார். சிங்கையாவின் தலையின் மீது ஜெகன் மோகன் ரெட்டி சென்ற கார் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


ஆனால், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, தொண்டர்களை பார்த்து கையை அசைப்பதிலேயே மும்முராக இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகியது.


இந்த நிலையில், தொண்டர் உயிரிழந்த சம்பவத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


ஆரம்பத்தில் உயிரிழந்த தொண்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, சமூக வலைதளங்களில் ஜெகன் மோகனின் கார் தொண்டர் மீது ஏறி இறங்கும் வீடியோ வைரலான நிலையில், அதனடிப்படையில் பிரிவுகள் மாற்றம் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குண்டூர் மாவட்ட எஸ்.பி., சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement