நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்; அத்திக்கடவு திட்டம் இதுவல்ல என்கிறார் எம்.பி.,

அவிநாசி; அவிநாசி, குலாலர் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூ., கட்சி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் மாவட்ட இரண்டாவது மாநாடு நடந்தது. தேசிய குழு உறுப்பினர் வஹிதா நிஜாம், எம்.பி., சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுப்பராயன் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு அந்தந்த சங்கங்களின் தலைவர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செயல்பாட்டில் உள்ளது, அத்திக்கடவு - அவிநாசி திட்டமே கிடையாது. அத்திக்கடவிலிருந்து செயல்படுத்தி இருந்தால் வாய்க்கால் மூலம் அதன் கரையோரங்களில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். அரசியல் அறுவடைக்காக அவசர கதியில் முடிவு செய்யப்பட்ட திட்டம். வறட்சிக்காலத்தில் இதன் நிலை தெரியும்.

பி.ஏ.பி., மற்றும் எல்.பி.பி., வாய்க்கால் திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பாண்டியாறு - மாயாறு திட்டம்; ஆனைமலை - நல்லாறு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement