விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை

பாகூர் : பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவராமன்,45; இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவரும், நிலத்தில் நெல் அறுவடை செய்து விட்டு வைக்கோலை கட்டினர்.

மாலை 6:00 மணிக்கு, சிவராமன் சொந்த வேலையாக நிலத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இளவரசி இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு சென்றபோது, அங்கு அவரது கணவரை காணவில்லை. வெகு நேரமாகியும் சிவராமன் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று காலை சோரியாங்குப்பத்தில் காஸ் சிலிண்டர் குடோன் அருகே உள்ள வாய்க்காலில் சிவராமன், தலைக்குப்புற விழுந்த நிலையில் இறந்து கிடந்தார். பாகூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளவரசி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement