முக்கிய அதிகாரிகளுக்கே கூட தெரியாமல் சஸ்பென்ஸ்; டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் 3 பேர்

வாஷிங்டன்: ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்த அறிவிப்பு நடவடிக்கையை தமது அரசின் அதி உயர் முக்கிய அதிகாரிகளிடம் கூட ஆலோசிக்காமல் அதிபர் டிரம்ப் ரகசியமாக வைத்திருந்த விவரம் வெளியாகி இருக்கிறது.
ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே கடந்த 12 நாட்களாக நீடித்த யுத்தம், அமெரிக்காவின் முயற்சியால் தற்போது போர் நிறுத்தமாக கைகூடி உள்ளது. சண்டை போட்டுக் கொண்ட இருநாடுகள் அறிவிப்பதற்கு முன்னதாகவே, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முதலில் மறுத்த ஈரான் பின்னர் டிரம்ப் அறிவிப்பை வழிமொழிய, இஸ்ரேலோ ஒருபடி மேலே சென்று நன்றியையும் தெரிவித்துக் கொண்டது. 12 நாட்களாக நீடித்த இந்த யுத்தம், டிரம்பின் ஒரேயொரு போர் நிறுத்த அறிவிப்பு என்ற பதிவின் மூலம் எப்படி சாத்தியமானது? டிரம்பின் அறிவிப்புக்கு முன்னர் நடந்த அரசியல் கள நிலவரங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
மிக முக்கியமான, உலக நாடுகள் அனைத்தும் அத்தனை அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஈரான், இஸ்ரேல் சண்டையையும், அதன் போக்கிலான முன்னேற்றங்களையும் உற்று நோக்க ஆரம்பித்து இருந்தது.
இப்படியான அரசியல் கால சூழலில் காற்றில் அசைந்தாடும் ஆலமர விழுதுகள் போல் போர்ச்சூழல் அங்கிங்கும் இங்கும் ஆடிக் கொண்டு இருந்தன. போர் நிறுத்த அறிவிப்புக்கு எடுத்த நடவடிக்கைகள் அவரது அரசின் அதி உயர் பொறுப்பு வகிக்கும் முக்கிய அதிகாரிகளிடம் கூட விவாதிக்காமல் டிரம்ப் சஸ்பென்ஸாக வைத்திருந்து இருக்கிறார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் உதவியால் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். இவர்கள் மூன்று பேரும், ஈரானிடம் நேரடி மற்றும் மறைமுக வழிகளில் போர் நிறுத்தம் செய்யும் வழிகளை கையாண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது;
கத்தார் இதற்கு மத்தியஸ்தம் செய்ய உதவியது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்களுடன் பேசிய பின்னர், திடீரென போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுகிறார்.
போர் நிறுத்த விவாதங்களில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி பங்கெடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போர் நிறுத்த முடிவுக்கு மற்றொரு பக்க பலமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பிரத்யேக செயலி: அறிமுகம் செய்தது ரயில்வே
-
முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா
-
காலநிலை மாற்றத்திற்கு பலியாகிறதா காஷ்மீர்..
-
திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்: சீமான் அதிர்ச்சி தகவல்
-
வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் மற்ற துறைகள் திறப்பு எப்போது : தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்