காலநிலை மாற்றத்திற்கு பலியாகிறதா காஷ்மீர்..


இந்தியாவின் அழகிய பள்ளத்தாக்காகக் கருதப்படும் காஷ்மீர் தற்போது ஒரு பரிதாபமான வேளாண் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாக நிலவிய கடுமையான வெப்பம் மற்றும் மலைப்பகுதிகளில் பனிக்கட்டி விரைவில் உருகியதன் விளைவு,குறைவான மழைப்பொழிவு என இயற்கை நியதிக்கு எதிரான சூழல் காரணமாக விவசாய நிலங்கள் வறட்சியாக மாறியுள்ளது.
Latest Tamil News
ஸ்ரீநகரை ஒட்டியுள்ள செக் தரா என்ற பகுதியில், ஒரு விவசாயி கூறுகையில் "நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற கடுமையான வெப்பத்தையும், தண்ணீரின்றி வயல்கள் அழிந்ததையும் சந்திக்கவில்லை. இந்த நிலை தொடருமானால், வாழ்வாதாரம் நசுங்கிவிடும் என்றார் மனக்குமுறலுடன்.எப்போதும் பசுமை தவழும் காஷ்மீர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருவது வேதனை தருவதாக குறிப்பிட்டார்.

பொதுவாக காஷ்மீர் விவசாயம் என்பது பெருமளவில் உருகும் பனிக்கட்டிகளைச் சார்ந்ததாகும். ஆனால் இந்த ஆண்டு காலநிலை முற்றிலும் மாறியுள்ளது.பனிக்கட்டி வேகமாக உருகிவிட்டது.

மழை இல்லை குளிர்ச்சி குறைந்துவிட்டது,இதனால் விவசாயிகள் தங்கள் நெற்பயிர்கள், காய்கறிகள் போன்ற முக்கிய பயிர்களை தக்கவைக்க இயலாமல் தவிக்கின்றனர்.

காஷ்மீர் வேளாண் துறை அதிகாரிகள், பாசனத்திற்கு விசைபம்புகள், பொதுத் தொட்டிகள் போன்ற இடைக்கால உதவிகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறதாக தெரிவித்துள்ளனர். ஆனால், நீடிக்கும் வெப்பம் மற்றும் நீர்நிலை பின்வாங்கினால் இந்த முயற்சிகள் போதுமானதாக இருக்காது என விவசாயிகள் கூறுகின்றனர்.
Latest Tamil News
காஷ்மீர் போன்ற இயற்கை சார்ந்த இடங்கள், காலநிலை மாற்றத்தின் கடும் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளன என்பதையே தற்போதைய வறட்சி காட்டுகிறது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை நோக்கி விவசாயத்தை மறுசீரமைப்பது அவசியமாகிறது.

-எல்.முருகராஜ்

Advertisement