திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்: சீமான் அதிர்ச்சி தகவல்

17

மதுரை : '' எனக்கு தெரிந்து திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர், '' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: முருகனை தொட்டதே ஒரு அரசியல் தான். ஆன்மிகம், முருகன் மாநாடு, பக்தர்கள் மாநாடு என்று சொன்னால் அரசியல் இல்லையா. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும்போது தொடுவதற்கு என்ன காரணம் என கேட்க வேண்டும்.


இப்ப மாநாடு போட்டவர்கள், இதே மாநாட்டை அடுத்தாண்டு போடுவார்களா என்று கேட்கவேண்டும். ஆண்டுதோறும் இதே போன்று மாநாடு போட்டால், அரசியல் இல்லை , ஆன்மிகம். தேர்தலில் ஓட்டுவரவில்லை என்றால், இது பயனில்லை என்று விட்டு விடுவார்கள். அடுத்தாண்டு போடட்டும். அரசியலா, இல்லையா என பார்ப்போம்.



விவசாயிகளின் குறைகளை ஆட்சியாளர்கள் என்றைக்கும் கேட்டது கிடையாது. வெள்ள பாதிப்பின் போது நிவாரணம் கேட்ட விவசாயிகள் போராடி உள்ளனர். அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். வலி வரும்போதும், துயரம் வரும் போதும் தெருவில் நின்று போராடுவது , பிறகு துன்பத்தை துயரத்தை நம்முயை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது உரிமைக்கு நிற்காத அரசுகளுக்கு மீண்டும் ஓட்டு போட்டு அதிகாரம் அளிப்பது மிகப்பெரியதவறு. இனியாவது விழிப்புற்று எழ வேண்டும். இல்லை என்றால் கடினம்



ஸ்ரீகாந்த் பாவம். எனக்கு தெரிந்து, திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர். புகழ் பெற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர் சிக்கிகொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகின்றேன். ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போதை பொருள் வராது. நீண்ட நாட்களாக இருக்கிறது. நாடெங்கும் இருக்கிறது. திரையுலகில் மட்டும் அல்ல. பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விட்டது. வழிபாட்டு தலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நினைத்தால் போதைப் பொருள் ஒழிந்துவிடும். ஸ்ரீகாந்த் புகழ்பெற்ற நடிகர் என்பதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் கைதாகவில்லை என்றால் விற்பனை தொடரும். ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டும். ஆனால், நினைக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement