சட்டசபை தேர்தல் முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? மீண்டும் கேட்கிறார் ராகுல்

29


புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.


மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தொகுதியில் ஆறு மாதங்களில் 29 ஆயிரத்து 219 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது முதல்வர் பட்னவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.


ஐந்தே மாதங்களில் பட்னவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்தது எப்படி? இந்த தொகுதியில் தினசரி 162 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வரை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி?



@quote@6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத பலர் ஓட்டளித்தனர் என வாக்குச்சாவடி முகவர்கள் கூறி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு வீட்டு முகவரியை உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. quote


ஒரு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலே அது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? தேர்தல் கமிஷன் மவுனம் காப்பது ஏன்? டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்தது. ஆனால், இதனை ஏற்காத ராகுல், உண்மையை வெளியிட வேண்டும் என்றார். 'மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக காங்., எம்.பி., ராகுல் புகார் கூறுவது, முற்றிலும் அபத்தமானது' என தேர்தல் கமிஷன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






@quote@

பதிலடி

இதற்கு விளக்கமளித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: ஆலோசனைக்கு ராகுலை அழைத்தோம். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ராகுலை சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். அவர் குறிப்பிடும் எந்த நாளிலும் சட்டசபை தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்க தயாராக உள்ளோம்.. அனைத்து தேர்தல்களும் சட்டவிதிகளின்படியே நடக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்து வைக்கிறோம். தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. quote

Advertisement