காரைக்குடி டி.சி.பி.எல்., கெமிக்கல்  நஷ்டத்தால் உற்பத்தி நிறுத்தம் : 380 பேர் வேலையிழப்பு

சிவகங்கை: காரைக்குடியில் டி.சி.பி.எல்., கெமிக்கல் நிறுவனம் நஷ்டம் காரணமாக உற்பத்தியை நிறுத்தியதால், 380 ஊழியர்கள் வேலை இழந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலுாரில், 1970ல் தமிழக அரசு சார்பில் கெமிக்கல் நிறுவனம் துவக்கப்பட்டது. பேப்பர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்திக்காக தேவைப்படும் சோடியம் ஹைட்ரோ சல்பேட் இங்கு தயாரிக்கப்பட்டது.

இக்கம்பெனியை 16 ஆண்டுகள் வரை தமிழக அரசு இயக்கி வந்தது. 1986ல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனியாரின் கீழ் இங்கு 70 அலுவலர்கள், 110 ஊழியர்கள், 200 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.

துவக்கத்தில் இங்கு ஆண்டுக்கு 10,000 டன் வரை சோடியம் ஹைட்ரோ சல்பேட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மூலப்பொருட்களின் விலை உயர்வால், ஆண்டுக்கு 7,000 டன் மட்டுமே உற்பத்தியானது.

ஆனால், சீனாவில் தயாரிக்கப்படும் சோடியம் ஹைட்ரோ சல்பேட் குறைந்த விலைக்கு கிடைப்பதால், இந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஜூன் 19 முதல், நிறுவனம் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. இதனால், தற்போது அங்குள்ள 380 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

நிறுவனம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மதுரை தொழிலாளர் உதவி கமிஷனரிடம் ஊழியர்கள் முறையிட்டுள்ளனர். இரு தரப்பினரிடமும் பேசி முடிவு எடுப்பதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement