பாதாள சாக்கடை பணியால் முடங்கிய மருத்துவமனை பாதை

மணலி, மணலியில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியால், நகர்ப்புற மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

மணலி மண்டலம், 19வது வார்டு, மஞ்சம்பாக்கம் பகுதியில், 100 படுக்கை வசதிகளுடன் நகர்ப்புற மருத்துவமனை செயல்படுகிறது.

இங்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள், பொது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, கர்ப்பிணியரும் மாதாந்திர பரிசோதனைக்கு வந்து செல்வர்.

இந்நிலையில், போக்குவரத்து வசதியில்லாத இடத்தில், இந்த மருத்துவமனை அமைந்திருப்பதால், நோயாளிகள் மிகுந்த சிரமம் மேற்கொள்வதாக புகார் எழுந்து வந்தது. இதற்கிடையில், இரு வாரங்களாக மருத்துவமனைக்கு செல்லும் வழியில், பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

மணலியில் இருந்து, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்லும் வகையில், பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி நடக்கின்றன. மருத்துவமனைக்கு மாற்று வழி ஏதும் ஏற்படுத்தாமல், பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்வதால், அவ்வழியே போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பள்ளம் தோண்டி, சாலையின் இருபக்கமும் மண் குவித்து வைக்கப்படிருப்பதால், வழித்தடம் அபாயகரமாக மாறியுள்ளது. மருத்துவமனை வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களும், அவ்வழியை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குழாய் பதிக்கும் பணியை விரைந்து மேற்கொண்டு, சாலையை சீரமைத்துக் தரவேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement