மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

கிண்டி, கிண்டியில், குடும்ப பிரச்னை காரணமாக, மின்மாற்றி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர், மின்சாரம் தாக்கி பலியானார்.

எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சதீஷ், 45. திருமணமாகாத இவர், தினமும் மது குடித்துவிட்டு, போதையில் இருப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.

இவரின் சகோதரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வசிக்கிறார். நேற்று, போதையில் இவரது வீட்டுக்கு சென்ற சதீஷ், சகோதரியுடன் தகராறு செய்துள்ளார்.

பின், அருகில் உள்ள மின்மாற்றியில் ஏறி அமர்ந்து, குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், மின் மாற்றியில் அமர்ந்த நிலையிலேயே அவர் பலியானார்.

தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார், சதீஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement