கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.250 ஆக உயர்வு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் விலை, இதுவரை இல்லாத வகையில், கிலோ 250 ரூபாயை கடந்துள்ளது.

இதுபற்றி தேங்காய் வியாபாரிகள், கொப்பரை கொள்முதலாளர்கள் கூறியதாவது:

வழக்கமாக, மே முதல் அக்., மாதம் வரை தேங்காய், கொப்பரை சீசன் என்றாலும், வரத்து குறைந்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் தேங்காய் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக சரிந்துள்ளது.

அதேநேரம் தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2024 வரை, கொப்பரை 1 கிலோ அதிகபட்சம் 120 முதல் 140 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று முன்தினம், 250.99 ரூபாய்க்கு விலை போனது. வரும் ஜன., வரை இதேநிலை நீடிக்கலாம்.

கேரளாவின் கூட்டுறவு நிறுவனமான கேராபெட், போதிய அளவு கொப்பரை தேங்காய் கிடைக்காததால், எண்ணெய் உற்பத்தியில் ஒரு யூனிட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதேசமயம், இங்குள்ள தேங்காய் எண்ணெய் தயாரிப்பு யூனிட்டில், 1 லிட்டர் எண்ணெய், கடந்தாண்டு 200 ரூபாய்க்கு விற்றது; தற்போது, 450 ரூபாய்க்கு விலை போகிறது. தேங்காய், கொப்பரை விலை உயரும்போது, தேங்காய் எண்ணெய் விலை மேலும் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement