ஏலச்சீட்டு நடத்தி ரூ. 24 லட்சம் மோசடி தாய், மகன் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி: ஏலச்சீட்டு நடத்தி, மின்துறை ஊழியரின் மனைவியிடம், 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி, வேல்ராம்பட்டு, நேதா நகரை சேர்ந்த கஸ்துாரிபாய், 70. இவர், மின்துறையில் பணியாற்றிய கணவர் ராஜேந்திரன் இறந்து விட்டதால், அவரது பென்ஷன் தொகையை கொண்டு, விபத்தில் உடல்நிலை பாதித்த தனது மகன் விஜயபாபுடன் வசித்து வருகிறார்.

முதலியார்பேட்டை பாரதி மில் வீதி சேர்ந்த ராஜேஸ்வரி, அவரது மகன் கராத்தே மாஸ்டர் வினோத் ஆகியோர் நடத்தி வரும் மாத ஏலச்சீட்டில் சேரும்படி கடந்த 2019ம் ஆண்டு கஸ்துாரிபாயை அணுகியுள்ளனர்.

கஸ்துாரிபாய் அவர்களிடம் 3 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சேர்ந்து, மாதம் 10 ஆயிரம் வீதம் 2 சீட்டுகள் கட்டினார். மேலும், 2 லட்சத்து 40 ஆயிரம் ஏலச்சீட்டில் மாதம் 3 ஆயிரம் வீதம் தனது பெயர் மற்றும் உறவினர்கள் பெயரில் 5 சீட்டுகள் கட்டி வந்தார். மேலும், ராஜேஸ்வரிடம் வட்டிக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

இதற்கிடையே, அனைத்து மாதங்களும் சரியாக பணம் செலுத்திய நிலையில், 3 லட்சம் ஏலச்சீட்டில் 2 சீட்டிற்கு 6 லட்சம், 2 லட்சத்து 40 ஆயிரம் ஏலச்சீட்டில் 5 சீட்டிற்கு 12 லட்சம், கடனாக வழங்கிய 6 லட்சம் என, கஸ்துாரிபாய் தனக்கு சேர வேண்டிய மொத்தம் 24 லட்சம் ரூபாயை, ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் வினோத் ஆகியோரிடம் கேட்டுள்ளார்.அவர்கள் பணத்தை திரும்ப தரமால், கஸ்துாரிபாயை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பினர்.

கஸ்துாரிபாய் புகாரின் பேரில், மோசடி செய்த ராஜேஸ்வரி, வினோத் ஆகியோர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement