ரயிலில் கர்ப்பிணியிடம் சில்மிஷம் திருவண்ணாமலை வாலிபர் கைது
சேலம், ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த திருவண்ணாமலை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த, 28 வயது கர்ப்பிணி, சென்னையில் பணிபுரியும் கணவர் வீட்டுக்கு, கடந்த வாரம் சென்றார். தொடர்ந்து கடந்த, 22 இரவு, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் ரயிலில், எர்ணாகுளத்துக்கு, 'எஸ்2' பெட்டியில் பயணித்தார்.
மேல் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் மூலம், கீழ் படுக்கையில் இருந்த வாலிபரிடம் கேட்டு, அதில் துாங்கிக்கொண்டிருந்தார். இரவு 11:30 மணிக்கு, மொரப்பூர் அருகே வந்தபோது, மேல் படுக்கைக்கு மாறிய வாலிபர் இறங்கி, கர்ப்பணியிடம் சில்மிஷம் செய்தார். அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி கூச்சலிட்டதோடு, டிக்கெட் பரிசோதகர், ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.
நள்ளிரவு, 12:00 மணிக்கு ரயில் சேலம் வந்தபோது, போலீசார் ரயிலில் ஏறி, சில்மிஷத்தில் ஈடுபட்டவரிடம் விசாரித்ததில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பெரணமல்லுாரை சேர்ந்த தமிழரசன், 32, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.