மருத்துவக்கல்லுாரிகளில் கிளினிக்கல் தொற்று நோயியல் துணைப்பிரிவு * துவக்க பணிகள் தீவிரமாக நடக்கிறது

விருதுநகர்,:தமிழக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் புதிதாக கிளினிக்கல் தொற்றுநோயியல் துறை துணைப்பிரிவை துவங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது.
தமிழகத்தில் காலரா, வைரஸ், டெங்கு உட்பட பரவும் தன்மையுடைய நோய்களை துவக்கத்திலேயே கண்டறிந்து நோய்பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. இதற்காக 36 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளிலும் புதிதாக கிளினிக்கல் தொற்று நோயியல் துறை துணைப்பிரிவு துவங்குவதற்கான பணிகள் நடக்கிறது.
பொதுவாக தண்ணீர், காற்று மூலம் நோய்பரவல் அதிகம் உள்ளது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு காலநிலைகளில் பரவும் நோய் பரவல் குறித்த தரவுகளை திரட்டி நோய்களின் தீவிரம், பரவுவதற்கான காரணம், துவங்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளில் மருத்துவ குழுவினர் ஈடுபடவுள்ளனர்.
இதன் மூலம் நீண்ட நாள்களாக சமூகத்தில் உள்ள பரவும் நோய்கள் குறித்தும், தடுப்பூசிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படும். இப்பணிகள் அனைத்தையும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த துணைப்பிரிவில் புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டு விரைவில் கிளினிக்கல் தொற்றுநோயியல் துறை துணைப்பிரிவு துவங்குவதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.