சோமநாதேஷ்வரர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்:மருதம் சோமநாதேஷ்வரர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் சோமநாதேஷ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், கோவில் பகுதியில் மக்கள் டிராக்டர்களை நிறுத்தியும், கால்நடைகளை கட்டியும் வருகின்றனர். அருகிலுள்ள தெரு குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீரானது, கோவிலுக்கு அருகில் தேங்கி நிற்கிறது.

இதனால், அப்பகுதியில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கோவில் அருகே அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

எனவே, மருதம் சோமநாதேஸ்வரர் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement