ஆதரவற்றோர் இல்ல மாடியிலிருந்துகுதித்து தப்பிக்க முயன்ற சிறுமி

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் அரசு ஆதரவற்றோர் இல்ல நேற்று 2வது மாடியிலிருந்து 10 வயது சிறுமி குதித்து தப்பிக்க முயன்றார். அச்சத்தில் கூச்சலிட்ட அவரை பொதுமக்கள் காப்பாற்றினர்.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி பிளாக் ரோட்டில் அரசு சார்பில் அன்னை சத்யா ஆதரவற்றோர் இல்லம் செயல்படுகிறது. இங்கு பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். நேற்று மதியம் 12:15 மணிக்கு 10 வயது சிறுமி ஒருவர் 2 வது மாடியில் ஜன்னல் சிலாப்பில் நின்றபடி அழுது கூச்சலிட்டார். அதனை கவனித்த சில இளைஞர்கள் உடனடியாக இல்லத்திற்குள் சென்று ஏணி உதவியுடன் சிறுமியை பத்திரமாக மீட்டனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி இல்லத்தை விட்டு தப்பிச் செல்வதற்காக 2வது மாடியில் இருந்து கீழே சிலாப்பில் இறங்கிய போது அதிக உயரத்தை கண்டு பயந்து அழுது கூச்சலிட்டது தெரிந்தது. இதுபோன்று ஏற்கனவே ஒருமுறை அவர் தப்ப முயன்றார். எதற்காக சிறுமி தப்பிச்செல்ல முயன்றார் என்பது குறித்து சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மூலம் இல்ல நிர்வாகி, பணியாளர்களிடம் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement