திருத்தணியில் கால்நடைகள் உலா நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருத்தணி:திருத்தணியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள முக்கிய சாலைகளான அரக்கோணம் சாலை, சித்துார் சாலை, ம.பொ.சி., சாலை, பேருந்து நிலைய சாலை மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், இச்சாலைகளில், 30க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. மேலும், சாலையில் படுத்தும் ஓய்வெடுக்கின்றன.இந்த கால்நடைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.

'சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும். மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என, கலெக்டரும், நகராட்சி அதிகாரிகளும் உத்தரவிட்டிருந்தனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:

நகராட்சியில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளோம்.

இருப்பினும் சிலர், கால்நடைகளை நகராட்சி மாநில நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிய விடுகின்றனர்.

ஓரிரு நாளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement