பேசும் பொம்மையை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை; பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி

புதுச்சேரி : புதுச்சேரி முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாலியல் சீண்டல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேசும் பொம்மைகளை உருவாக்கியுள்ளனர்.

பள்ளி மாணவிகள் போல் ஸ்கர்ட் மற்றும் சோலை அணிந்த இந்த பொம்மைக்கு 'ஜாரா' எனப் பெயரிட்டுள்ளனர்.

சென்சார் பொறுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பேசும் பொம்மை பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போக்சோ சட்டம் குறித் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஜாரா பொம்மை 'குட் டச், பேட் டச்' பற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சொல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பொம்மை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் துவக்கி வைத்தார். பொம்மையின் அந்தரங்க பாகங்களை தொட்டால் தொடாதே என, மும்மொழிகளிலும் சொல்கிறது. பொம்மைகளை உருவாக்கிய மாணவ, மாணவிகள் கூறுகையில், 'பிளஸ் 2 படிக்கிறோம். குழந்தைகளுக்கு போக்சோ வழிப்புணர்வு ஏற்படுத்த ஜாரா பொம்மை உருவாக்கியுள்ளோம். பொம்மைகள் தயாரிக்க அச்சி தயாரித்துவிட்டோம். தேவைப்படுவோருக்கு பொம்மைகள் தயார் செய்து தரப்படும்.

இதன் மூலம் நாங்கள் படிப்புடன் புதிய படைப்புகளை உருவாக்க தைரியம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

பொம்மை தயாரிக்க வழிகாட்டிய இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம் கூறுகையில், 'பொம்மைகளுக்கு நாங்கள் காப்பிரைட் உருவாக்கவில்லை. வரும் வாரங்களில் அரசு அனுமதி பெற்று அருகில் உள்ள பள்ளிகளில் செயல் முறை விளக்கம் அளிக்கவுள்ளோம். தேவபடுவோருக்கு பொம்மைகளை உருவாக்கி அதன் செயல்முறையையும் சொல்லி தருவோம்' என்றார்.

Advertisement