வணிக இடத்தில் மனை வாங்கி வீடு கட்டுவதால் பாதகங்கள் என்னென்ன?

நான் வடசித்துார் கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு 'விண்ட் மில்' பகுதியில் மூன்று ஏக்கர் பூமி வாங்கினேன். இப்போது அங்கு கட்டடம் கட்ட வாய்ப்பு உள்ளதா என்பதை கூறவும். அவ்வாறு இருந்தால் என்ன செய்ய வேண்டும்.

- மகேஸ்வரன், சரவணம்பட்டி.

முதலில் மாஸ்டர் பிளானில், உங்கள் கிராமம் சர்வே எண் வருகிறதா என பார்க்கவும். வந்தால் என்ன பயன்பாட்டுக்கு என பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, குடியிருப்பு, வணிகம், விவசாயம் அல்லது கலவை என ஏதாவது ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும்.

அதன்படி தான், அந்த உபயோகம் அமைய வேண்டும். மாஸ்டர் பிளானில் காணப்படவில்லை என்றால் எந்த உபயோகத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். குடியிருப்பு என்றால் மனை பிரிவுகளாக பிரித்து விண்ணப்பிக்கலாம். தொழிற்சாலை என்றால் ஷெட் அல்லது தொழில் கட்டடம் கட்டலாம்.

எதுவாக இருந்தாலும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் - 2019ன் படி, பதிவு பெற்ற பொறியாளரை வைத்துதான் விண்ணப்பிக்க வேண்டும்.

வணிக இடத்தில் மனை வாங்கி, வீடு கட்டுவதினால் பாதகங்கள் என்ன? எதிர்காலத்தில் ஏதாவது பிரச்னை வருமா? மின் கட்டணம், வீட்டு வரி உயருமா? குடியிருப்பு இடத்துக்கும் இதற்கும் வித்தியாசம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

- பிரேம்குமார், கணபதி.

வணிக இடத்தில் மனை வாங்கி, வீடு கட்டினால் சட்டம் சம்பந்தமாக எந்த பிரச்னையும் பிற்காலத்தில் வராது. ஆனால், நெரிசல் நிறைந்த போக்குவரத்து அதிகமாகி சத்தம், துாசி என, சுகாதார கேடுகளுடன் வாழ்க்கை தொடர வேண்டுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஏதோ ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும் நிலை வரலாம். அதற்கு வீட்டுக்கென்று நல்ல காற்றோட்டமான, அமைதியான, லே-அவுட்டில் நல்ல மக்கள் அருகில் இருக்கும் வண்ணம், மனை வாங்கி வீடு கட்டி வசிப்பது உசிதம் அல்லவா.

கோவை-புலியகுளம், அம்மன் குளம் அருகே, 24 சதுர மீட்டர் உள்ள இடத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஓட்டு வீடு உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து, 500 அடி துாரம் வீட்டின் இரு புறமும் ஆறு அடி ரோடும், மேற்கே, 12 அடி ரோடும் உள்ளது. தற்போது, என்ன விலைக்கு வாங்கலாம்?

-மனோகரன், அம்மன்குளம்.

அணுகு பாதை இருபுறமும் இருப்பதால், மனையை இரண்டாக பிரித்து, 12 அடி பாதையை பார்த்து ஒரு மனையும், ஆறு அடி பாதையை பார்த்து மறுமனை என விற்க முயற்சிப்பது நல்லது. அதுவே கூடுதல் பலனை தரும்.

12 மற்றும் ஆறு அடி பாதை என்பது, நடுத்தர மக்களைக்கூட ஈர்க்காது. மற்றவர்கள்தான் அவற்றை வாங்கக்கூடும். சுற்றுச்சூழலையும் பார்க்க வேண்டும். மெயின் ரோட்டில் அதாவது கிட்னி சென்டர் உள்ள ரோட்டில், சென்ட் ரூ.50 முதல், 60 லட்சம் விற்னையாகிறது.

இந்த இடம், சென்ட்க்கு ரூ.20 முதல், 25 லட்சம் வரை செல்லலாம். அங்கேயே தொடர்ந்து வசித்து வருபவர்கள், கண்டிப்பாக வாங்க முன்வருவர்.

குடியிருப்பு இடத்தில் கடைகள், அலுவலகங்கள் என வியாபார நடவடிக்கைக்கு பொதுவாக தடை உள்ளது. பக்கத்து வீடு அல்லது லே-அவுட் காரர்கள் புகார் செய்து தடை செய்யலாம்.

ஆனால், வணிக இடத்தில் வீடு கட்டலாம். யாரும் மறுக்க முடியாது. அதேசயம் அவ்வாறு கட்டுவது உசிதமல்ல என்பதை அறியவும்.

திருச்சி மெயின் ரோட்டில், காங்கேயம்பாளையம் கிராமத்தில் உள்ளேன். நான் தொழில் துவங்கு வதற்காக, 10 ஆயிரம் சதுரடி கொண்ட குடோன் கட்டுவதற்கு, எல்.பி.எஸ்.,ஐ அணுகினேன். அவர், உங்கள் இடம் விவசாய வகைபாட்டில் உள்ளது என்கிறார். இடத்தை வகை மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்.

-கருணாநிதி, காங்கேயம்பாளையம்.

விவசாய நிலமாக இருந்தால், ஐந்து ஏக்கர் குறைவாக இருந்து, மேற்படி நிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்விதமான விவசாயமும் செய்யாமல், தரிசாகவே கிடந்தது என வி.ஏ.ஓ., சான்றிதழ் பெற்று, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட கலெக்டரும், தாசில்தார் பார்வைக்கு அனுப்பி, பரிந்துரை கேட்பார். தாசில்தாரும் நீரோடை, நீர் வழி, புராதன சின்னங்கள், கனிம வளங்கள் போன்றவை அந்த இடத்தில் இல்லை என பரிந்துரைக்கும்பட்சத்தில், விவசாயம் இல்லாத உபயோகத்திற்கு அனுமதிக்கப்படலாம்.

-தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.

Advertisement