என்.எல்.சி., இந்தியா சார்பில் துாய்மை பிரசார பணிகள்  

நெய்வேலி :நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில் துாய்மை இந்தியா பிரசார இயக்கப் பணிகளை சேர்மன் துவக்கி வைத்தார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில் நெய்வேலி நகரப்பகுதிகள் மற்றும் அதன் அனைத்து திட்டப்பகுதிகள், சென்னை மண்டல அலுவலகம் உள்ளிட்ட பிரிவுகளில் துாய்மை இயக்க பிரசார பணிகள் நடந்தது.

என்.எல்.சி.,இந்தியா நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கி, துாய்மை பணியை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'சுத்தமும், சுகாதாரமும் தெய்வத்தன்மைக்கு ஒப்பானது.

துாய்மையான சூழலை பராமரிப்பது ஆன்மீகத் துாய்மைக்கு நிகரானது. என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தனது அலகுகள், அலுவலகங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் துாய்மை இயக்கத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டு, முன்னுதாரணமாக திகழ்கிறது' என்றார்.

சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திர சுமன், மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின்சக்தித் துறை இயக்குனர் வெங்கடாசலம், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், அனைத்து பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

நெய்வேலி நகரம், மெயின் பஜார், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் துாய்மைப் பணிகள், விழிப்புணர்வு பேரணிகள், பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்று நடுதல் நடந்தது.

Advertisement