அபினந்தனை கைது செய்த பாக்., ராணுவ அதிகாரி பயங்கரவாத தாக்குதலில் பலி

11

இஸ்லமாபாத்: இந்திய ராணுவ வீரர் அபினந்தனை சிறை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.


கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டி சென்ற போது, அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். இதையடுத்து, அவர் பாக்.,ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.


இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடும் எச்சரிக்கை மற்றும் அழுத்தத்தினால், சிறைபிடிக்கப்பட்ட 58 மணிநேரத்தில் அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் 2019ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அடாரி - வாஹா எல்லை வழியாக தாயகத்திற்கு திரும்பினார்.

அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கிய போது, அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர் தான்.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் ( TTP) என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட இருவர் உயிரிழந்தனர்.


அதேபோல, இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement