அரசு மருத்துவமனை அருகே தேங்கிய கழிவுநீரால் அபாயம் தொற்று அபாயத்தில் நோயாளிகள்

திருமழிசை, திருமழிசையில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, கழிவுநீர் தேங்கியுள்ளதால், தொற்று நோய் அபாயத்தில் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருமழிசை பேரூராட்சியில் பேருந்து நிலையம் அருகே, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருமழிசை, வெள்ளவேடு, பிரையாம்பத்து, காவல்சேரி, மற்றும் அதை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட பகுதிமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனை அருகே திருமழிசை பேரூராட்சி கட்டுப்பாட்டில் கட்டண கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்காததால், இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல் மருத்துவமனை அருகே தேங்கியுள்ளது.

இதை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, தொற்று நோய் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதேபோல், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர், தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும், கட்டண கழிப்பறையை முறையாக பராமரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளிகள் மற்றும் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement