இனி 10ம் வகுப்பு பொது தேர்வு ஆண்டுக்கு... இரண்டு முறை; 2026ல் அமல்படுத்த சி.பி.எஸ்.இ., அனுமதி

புதுடில்லி : அடுத்தாண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல் கட்ட தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், நாடு முழுதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த சி.பி.எஸ்.இ., நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சூழலில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்த ஒப்புதல் கிடைத்துள்ளது.
அடுத்தாண்டு அமல்
இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சன்யாம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாணவர்களுக்கு தேர்வு சம்பந்தப்பட்ட அழுத்தங்களை குறைப்பதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுத வாய்ப்பு தர வேண்டும் என, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.
இது தொடர்பாக வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில், பெற்றோர் - மாணவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
அந்த கருத்துகளின் அடிப்படையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படும்.
முதல் கட்ட பொதுத் தேர்வு பிப்ரவரி மாதமும், இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு மே மாதமும் நடக்கும். பிப்ரவரியில் நடக்கும் முதல் கட்ட தேர்வில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இரண்டாவது கட்ட தேர்வில் பங்கேற்பது மாணவர்களின் விருப்பம்.
பழைய நடைமுறை
முதல்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்திலும் வெளியிடப்படும்.
மாணவர்கள் பிப்ரவரியில் எழுதக்கூடிய தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறவில்லை என்றால், மே மாத தேர்வில் பங்கேற்கலாம்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம், இதில் ஏதாவது மூன்று பாடங்களில், மாணவர்கள் இரண்டாவது முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இதன் வாயிலாக, தங்கள் மதிப்பெண்களை அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.
குளிர் பிரதேசங்களில் பயிலும் மாணவர்கள் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு பொதுத் தேர்வை தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு நடைமுறை, பாடப்பிரிவு, வினாத்தாள் என அனைத்திலும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.
'இன்டெர்னல்' எனப்படும் உள்மதிப்பீடு தேர்வுகள் வழக்கம் போல ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அவர்களின் சான்றிதழ்களில் இடம் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு எழுதி வந்த நிலையில், இனி இரண்டு முறை எழுதலாம் என்ற அறிவிப்பு, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
உத்தரகண்டில் 18 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது; ஒருவர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்
-
15 பேருக்கு முதல்வர் காவல் பதக்கம்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!
-
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
-
ஈஷாவில் '26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின' விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
-
தலைமுடியில் கலர் கலராக அலங்காரம்: சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்