மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காசோளம் ஆண்டுதோறும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் மூன்று மாதங்களில் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து மார்க்கெட் கமிட்டி, தனியார் ஆலைகளில், கொண்டு சென்று விற்பனை செய்வர். ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். நடப்பாண்டில் 2,970 விவசாயிகள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக மக்காசோள பயிரில் உருவாகும் படைப்புழு தாக்குதல் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப்புழு செடியின் குருத்து பகுதியை உண்பதால், பயிர் முற்றிலுமாக சேதமடைகிறது.

மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், ஊடுருவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது மக்காசோளம் பயிரிட்டுள்ள வயல்கள், படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

அதிகாரிகள் ஆய்வு



இந்நிலையில், சங்கராபுரம் பகுதியில் துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மக்காசோள வயல்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் படைப்புழு தாக்குதலை கட்டுபடுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

படைப்புழு தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகி பயிர் சேதம், மகசூல் இழப்பு ஏற்படும்.தாய் பூச்சி, முட்டை குவியல்களை இலையின் அடிப்பகுதியில் இடுகின்றன. அதிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்பகுதியை தின்று சேதமாக்கும். வளர்ந்த புழுக்கள் தண்டு, அடிப்பகுதி, நுனிப்பகுதியை தின்று சேதம் விளைவிக்கும்.

பயிர் பாதுகாப்பு முறைகள்



பயிரில் 15 முதல் 20 நாட்களில் படைப்புழு தாக்குதல் அதிகரிக்கும் போது, அசாடிராக்டின் இ.சி 400 மி.லி., அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி 80 கிராம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

பயிரானது 40 முதல் 45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி., அல்லது நவ்லுரான் 10 இ.சி மருந்து 300 மி.லி., ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைதெளிக்கலாம்.

அதேபோல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால், புளு பெண்டமைடு 480 எஸ்.சி., 80 மி.லி., மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் உண்பதற்காக தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள் போன்றவற்றை வரப்பு பயிராக பயிரிட வேண்டும். அதன் மூலம் புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். பயிரிடுவதற்கு முன் கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூட்டு புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

ஒரு கிலோ கிராம் விதைக்கு, நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பிவேரியா பேசியானா அல்லது தயோ மீத்தாஸம் மருந்தினை 10 கிராம், இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.மக்காச்சோளத்திற்கு பிறகு, மீண்டும் அதனையே பயிரிடுவதை தவிர்த்து வேறு வகை பயிர்கள் என சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் மக்காசோள படைப் புழுவினை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர் தாக்குதலால் பெரும் நஷ்டம்



இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பயிர்கள் வளரும் பருவத்தில் அதிகமாக இருப்பதால், அதன் வளர்ச்சி முற்றிலும் பாதித்து 'மகசூல்' பாதிக்கிறது.

இதனை கட்டுப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் படைப்புழு தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகும் பயிர்களுக்கு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement