சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா

1

நியூயார்க்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். 41 ஆண்டுகளுக்கு பின், விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றுள்ளார்.


நம் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் 'ககன்யான்' திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நான்கு பேர்



இந்நிலையில், அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.



அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த இஸ்ரோ தீர்மானித்தது. இதையடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இஸ்ரோ இணைந்தது.


அதன்படி, 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 39, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.


முதலில் கடந்த மே 29ம் தேதி, விண்வெளிக்கு நால்வரும் பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வானில் நிலவும் சீதோஷ்ண நிலை, தொழில்நுட்ப பிரச்னை என ஆறு முறை விண்வெளி பயணம் தள்ளிப்போடப்பட்டது.




இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று பகல் 12:01 மணிக்கு, நான்கு பேரும் விண்வெளிக்கு புறப்பட்டனர்.


@twitter@https://twitter.com/dinamalarweb/status/1938046103091376427twitter

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, தொழிலதிபர் எலான் மஸ்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் வாயிலாக, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரையும் சுமந்து, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் புறப்பட்டது.
Latest Tamil News

இரண்டாவது வீரர்



இதையடுத்து, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுகிறார். விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்லும் முதல் வீரர் என்ற பெருமையும் அவரை சேரும்.



கடந்த 1984ம் ஆண்டு, ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலம் வாயிலாக, நம் விமானப் படையின் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.

தற்போது 41 ஆண்டுகள் கழித்து, இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது வீரராக சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார்.



சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, இன்று மாலை 4:30 மணிக்கு, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைகின்றனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.


மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.


விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுக்லா ஈடுபடுவார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நம் நாட்டின் மிக முக்கிய பிரமுகர் ஒருவருடன் அவர் பேசுவார் எனவும் கூறப்படுகிறது.


'விண்வெளிக்கு வெறும் கருவிகளை மட்டும் நான் சுமந்து செல்லப் போவதில்லை; கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறேன்' என, சுபான்ஷு சுக்லா ஏற்கனவே கூறியிருந்தார். நேற்று 'டிராகன்' செயற்கைக்கோள் வாயிலாக விண்வெளிக்கு புறப்பட்டதும், 'ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்' என உற்சாகமாக கோஷமிட்டார்.


ஆக்சியம் - 4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் செயற்கைக்கோள், தனியார் நிறுவனம் வாயிலாக அனுப்பப்படும் நான்காவது செயற்கைக்கோளாகும். சுபான்ஷு உள்ளிட்ட நால்வரின் விண்வெளி பயணம், விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


விண்வெளிக்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா, உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். கடந்த 2006ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான, நம் இஸ்ரோவின் சாதனை மற்றும் கனவு திட்டமான ககன்யான் திட்டத்துக்கு 2019ல் தேர்வானார். இதையடுத்து, ரஷ்யாவின் 'யூரி ககாரின்' விண்வெளி மையத்தில் சிறப்பு பயிற்சியை சுபான்ஷு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

விண்வெளி சென்றுள்ள சுபான்ஷுவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், 'நம் விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இந்தியாவிற்காக விண்வெளியில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்க உள்ளார். நட்சத்திரங்களை நோக்கிய ஒரு இந்தியரின் பயணத்தால், ஒட்டு மொத்த தேசமும் பெருமை கொள்கிறது. அவருடன் விண்வெளி சென்றுள்ள அமெரிக்கா, போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுக்கும் வாழ்த்துகள். உண்மையில் உலகம் மிகப்பெரிய குடும்பம் என்பதை நிரூபிக்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் சுபான்ஷு சுக்லா. விண்வெளிக்கு, 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள், விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார். அவருக்கும், உடன் சென்றுள்ள மற்ற விண்வெளி வீரர்களுக்கும் முழுமையான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்' என, குறிப்பிட்டுள்ளார்.




8 நிமிடங்களில் திரும்பிய

'பால்கான் - 9' ராக்கெட்சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரையும் சுமந்து செல்லும் விண்கலத்தை புவி வட்டப்பாதைக்கு வெளியே விட்டு விட்டு, 8 நிமிடங்களில் பால்கான் - 9 ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியது. ஸ்பேஸ்எக்ஸ் வடிவமைத்து தயாரித்த இந்த ராக்கெட் இரண்டு நிலைகளை கொண்டது. ராக்கெட்டின் முதல் நிலையில் உள்ள விலை உயர்ந்த பாகங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. இதனால், விண்வெளி பயணங்களின் செலவு குறைகிறது.




ஆனந்த கண்ணீரில் சுக்லாவின் தாய்

விண்வெளிக்கு சுபான்ஷு சுக்லா பயணம் மேற்கொண்டபோது, அதன் நேரலை காட்சிகளை அவரது தந்தை ஷம்பு தயாள் சுக்லா, தாய் ஆஷா சுக்லா இருவரும் உணர்ச்சிமயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். தாய் ஆஷாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உதடுகளை முணுமுணுத்தபடி பிரார்த்தனை செய்தார். சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள், லேசான புன்னகை கலந்த பெருமிதத்துடன் காணப்பட்டார். விண்வெளி பயணத்துக்கு சில மணி நேரம் முன், இந்திய பாரம்பரியப்படி தயிர் மற்றும் சர்க்கரை கலந்த 'தஹி சீனி'யை, வீடியோ கால் வாயிலாக மகனுக்கு தாய் ஆஷா வழங்கினார். அப்போது, 'எனக்காக காத்திருங்கள்... நான் போய் வருகிறேன்' என குடும்பத்தினரிடம் சுபான்ஷு சுக்லா கூறினார்.




ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்

சுபான்ஷு உற்சாகம்ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து, புவி சுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா அனுப்பிய செய்தியில், 'எனதருமை இந்திய மக்களே வணக்கம். 41 ஆண்டுகளுக்கு பின், விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புத பயணம், மணிக்கு 7.5 கி.மீ., வேகத்தில் பூமியை சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்டிருக்கும் மூவர்ண கொடி, உங்கள் அனைவருடனும் நான் இருக்கிறேன் என்பதை கூறுகிறது. இது, இந்தியாவின் மனித விண்வெளி பயணத்துக்கான துவக்கம். நீங்கள் அனைவருமே இந்த பயணத்தின் ஒரு பகுதி. ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டுள்ளார்.




சம்பளம் எவ்வளவு?

நம் விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 14 நாட்கள் விண்வெளியில் இருப்பதற்கு, கணிசமான சம்பளம் கிடைக்கும் என அனைவரும் நினைப்போம். ஆனால், அவருக்கு சம்பளம் எதுவும் கிடையாது என்பதே உண்மை. ஏனென்றால், ஆக்சியம் - 4 திட்டமானது, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த தனியார் விண்வெளி பயணம். இவற்றின் ஊழியராக சுக்லா செல்லவில்லை; முற்றிலும் இந்தியா 'ஸ்பான்சர்' செய்த விருந்தினராகவே செல்கிறார். இந்த விண்வெளி பயண திட்டத்துக்காக, 548 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது.சுக்லாவுக்கு சம்பளம் கிடைக்காவிட்டாலும், அவருக்கு பெருமை, கவுரவம், ககன்யான் திட்டத்துக்கான அனுபவமும் கிடைக்கும்; விண்வெளி மையத்தில் சுற்றுப்பாதை சோதனை அனுபவமும் கிடைக்கும்.

Advertisement