அதிக தொகுதி கேட்டு தீர்மானம் போட பொதுக்குழு கூட்ட சொல்கிறது காங்.,

2



'தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் கேட்டு தீர்மானம் நிறைவேற்ற, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்' என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருக்கு, மாநில நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:



தி.மு.க., கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் மாநாடு, பேரணி, பொதுக்குழு போன்ற கூட்டங்களை நடத்தி, அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றன.

சமூக வலைதளங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், செல்வப்பெருந்தகைக்கு எதிராக உள்ள கோஷ்டியினர் மட்டும், அதிக தொகுதிகளை பெற்றாக வேண்டும் என பேசி வருகின்றனர்.

அதுபோல இல்லாமல், அதிகாரப்பூர்வமாக நமது குரல் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு, ராகுலை அழைத்து வந்து, 'ரோடு ஷோ' நடத்துவது குறித்து விவாதிக்கவும், பொதுக்குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருவண்ணாமலையில் நடந்த ராகுல் பிறந்த நாள் விழாவில், அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தெலுங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான விஸ்வநாதன் பேசியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில், அதிக எண்ணிக்கை தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தது போல் விட்டுக்கொடுத்து விடக்கூடாது.

ஈரோடு கிழக்கு தொகுதியை ஏன் விட்டோம்; எதற்காக விட்டோம் என்பது யாருக்கும் தெரியாது; தலைவருக்கும் தெரியாது; டில்லி மேலிடத்திற்கும் தெரியாது.

நாம் எதிர்பார்க்கிற அதிக தொகுதிகளை, ராகுல் வாங்கி தருவார்.

வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக, அதிக எண்ணிக்கை எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபைக்கு செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.




- நமது நிருபர் -

Advertisement