வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

2


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது ஐந்து வயது மகள் ரோஸ்லிகுமாரியை, சிறுத்தை கவ்விச் சென்றது. சிறுமியில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் ஓடி வருவதற்குள், வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்து சென்றது.



சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர். சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணித்து வந்தனர்.


இந்நிலையில், இன்று (ஜூன் 26) அதிகாலை சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. சிறுத்தையை வேறு இடத்தில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுமியை கொன்ற சிறுத்தை 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை கூண்டில் சிக்கியதால், எஸ்டேட் தொழிலாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Advertisement