கேரளாவில் மீண்டும் கனமழை வயநாட்டில் வெள்ளப்பெருக்கால் அச்சம்

1

பந்தலுார் : கேரளா மாநிலம், வயநாடு சூரல்மலை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் வயநாடு அருகே கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது, மேப்பாடி சூரல்மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காணாமல் போனதுடன், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை சூரல்மலை பகுதியில், மலைப்பகுதியில் இருந்து வெள்ளம் அதிகரித்து, முண்டக்கை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தகவலின் பேரில், கல்பட்டா பகுதியிலிருந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தமிழகத்திற்கு உட்பட்ட பந்தலுார் மற்றும் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேயிலை இலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இப்பகுதியில் நம் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட, பெய்லி பாலத்தின் அடிப்பகுதியை தொட்டவாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநில அரசு முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

Advertisement