ஆசிரமத்தில் சேர்த்த மகன் முதிய தம்பதி தற்கொலை

தலகட்டபுரா: தங்களை முதியோர் ஆசிரமத்தில் மகன் சேர்த்ததால், மனம் நொந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

பெங்களூரின், ஜே.பி.நகரில் வசித்தவர் கிருஷண மூர்த்தி, 81. இவரது மனைவி ராதா, 74. இவர்களின் மகனுக்கு திருமணமாகி, மனைவி, பிள்ளைகள் உள்ளனர். மருமகளுக்கும், மாமியார், மாமனாருக்கும் ஒத்துப்போகவில்லை. தினமும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது.

எனவே தனியாக வசிக்க நினைத்த பெற்றோர், தங்களுக்கு வேறு வீடு பார்த்து வைக்கும்படி, மகனிடம் கேட்டனர். இதற்கு சம்மதிக்காத மகன், பெற்றோரை 2021ல் பேட்ராயனபுராவில் உள்ள, முதியோர் ஆசிரமத்தில் சேர்த்தார். இது அவர்களுக்கு மிகுந்த மன வருத்தம் அளித்தது.

தங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மகனிடம் மன்றாடினர். மகனும் 2023ல் பெற்றோரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருமகளுக்கு, இது பிடிக்காமல் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. கடந்த மாதம் ஜே.பி.நகர் இரண்டாவது ஸ்டேஜில் உள்ள, கமலம்மா ராமகிருஷ்ணப்பா முதியோர் இல்லத்தில் பெற்றோரை சேர்த்தார்.

இதனால் பெற்றோர் மனம் நொந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு உணவருந்திய பின், உறங்குவதாக கூறி அறைக்கு சென்றனர். அறைக்குள் கிருஷ்ணமூர்த்தியும், ராதாவும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை விஷயம் தெரிந்தது. முதியோர் இல்ல ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த தலகட்டபுரா போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Advertisement