சூரிய மின்வேலி அமைக்கும் பணி கிடப்பில்: விவசாயிகள் அதிருப்தி

வேப்பூர் : வேப்பூர் அருகே சூரிய மின்வேலி அமைக்கும் பணி கிடப்பில் உள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேப்பூர் அருகே காட்டுமயிலூர் காப்புக் காடு உள்ளது. இங்குள்ள வன விலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனத்தை விட்டு வெளியேறி காப்புக் காட்டையொட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால், ஆண்டுதோறும் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனை தடுக்க காப்புகாட்டையொட்டி தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, ரூ., 50 லட்சம் மதிப்பில் 10.2கி.மீ., துாரம் சூரிய மின்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2023ல் காப்புக்காட்டையொட்டி பெரியநெசலுார் பகுதியில் சூரிய மின்வேலி அமைக்கும் பணி துவங்கியது.

பணி துவங்கி 2 ஆண்டுகளான நிலையில், 4 கி.மீ., துாரம் மட்டுமே சூரிய மின்வேலி அமைத்தனர். தொடர்ந்து பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, உழவு பணி செய்து சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். சூரிய மின்வேலி பணி நடக்காததால் மீண்டும் சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கும் சூழல் உள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement