காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி

மங்களூரு : “காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்,” என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் கூறினார்.

தட்சிண கன்னடாவின் மங்களூரில் நேற்று நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில், அக்கட்சியின் கர்நாடக மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் நேற்று கலந்து கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சியின் தோல்வியை பயன்படுத்திக் கொள்வது எங்கள் நோக்கம் இல்லை. நாங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும்.

ஆட்சியின் இரண்டு ஆண்டு காலத்தில் முஸ்லிம்களை திருப்திபடுத்துவது, ஊழல் செய்வது மட்டும் நடந்துள்ளது. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் தொண்டர்கள் முடிந்த வரை பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் தவறு செய்துவிட்டோம் என்று மக்கள் கருதுகின்றனர். பா.ஜ., தலைவராக விஜயேந்திரா தொடருவா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஈஸ்வரப்பா, பசனகவுடா பாட்டீல் எத்னால் நீக்கப்பட்டனர். அவர்களை ஏன் மீண்டும் கட்சிக்கு அழைக்க வேண்டும்? பா.ஜ., சித்தாந்த அடிப்படையில் செயல்படும் கட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement