நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; விசாரணையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சிறப்பு குழு தகவல்

10


திருவனந்தபுரம்: மலையாள திரையுலகை உலுக்கிய நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளின் விசாரணையை கைவிடுவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது.


கடந்த 2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நடந்து வருகிறது.


இதை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. இந்த குழு தனது அறிக்கையை 2019ம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பித்தது.


அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு விசாரணை குழுவை நியமித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி.எஸ். சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமா கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் எந்தவித மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்று சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் குறித்து ஆர்வம் காட்ட முன்வராததே காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆக.,13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement